telepathygiridharbaba

telepathygiridharbaba
shirdisai thunai

Tuesday 10 December 2013

லக்ஷ்மீ தந்த்ரம். { chapter 1 4to 15}

1-4 ஜிதேந்த்ரியம் ஜிதாதாரம் ராகத்வேஷாவசீக்ருதம்
சதுர்தசாங்க யோகஸ்தம் ப்ரஸங்க்யாநபராயணம்
பொருள் – (அத்ரி முனிவர் பற்றித் தொடர்கிறது) தனது இந்த்ரியங்களை வென்றவர்; தனது மூலாதாரச் சக்கரம் குறித்து அறிந்தவர்; இந்த உலக விஷயங்கள் குறித்து விருப்பு-வெறுப்பு அற்றவர்; யோகத்தின் 14 அங்கங்களையும் அறிந்தவர்; உண்மையான ஞானத்தை அறியும் முயற்சியில் தளராதவர்….
1-5 வித்தே ஸ்வர்பாநுநா பாநௌ புரா தபநதாம் கதம்
நிதாநம் தமஸாமாத்யம் தேஜோராசிமநாமயம்
பொருள் – முன்பு ஒரு காலகட்டத்தில் சூரியனை ஸ்வர்பானு என்னும் அசுரன் தனது நிழலால் துளைத்து, அவனை நீக்க முயற்சித்தபோது, தபந நிலை எடுத்தவர்; தவம் என்பதே என்ன என்று இவரைச் சுட்டிக்காட்டி அறியவேண்டியுள்ளது; தேஜோமயமாக உள்ளவர்…. (ஸ்வர்பானு என்னும் அசுரன் தன்னுடைய நிழலால் சூரியனை அழிக்க முயற்சித்த நிகழ்வு ருக்வேதத்தில் கூறப்பட்டது)
1-6 அத்ரிமத்ரிகுணோபேதமத்ரிவர்கஸ்தமவ்யயம்
ப்ராப்த: ஸங்க்யா முபாஸீ ந ம்ருஷிம் ஹுதஹுதாசனம்
பொருள் – மூன்று குணங்களால் பாதிக்கப்படாத இவர் அத்ரி என்பவர் ஆவார்; மூன்று புருஷார்த்தங்களைக் கடந்தவர் (தர்மம், அர்த்தம், காமம்) ; எப்போதும் உள்ளவர்; காலையிலும் மாலையிலும் உபாஸிப்பதைக் கை விடாதவர்; எப்போதும் அக்னி கார்யங்களில் ஈடுபட்ட ரிஷி ஆவார்.
1-7 பதிவ்ரதாநாம் பரமா தர்மபத்நீ யசஸ்விநீ
ப்ரஹ்மா விஷ்ணு மஹேசாநாம் ஜநநீ காரணாந்தரே
பொருள் – (அனசூயா பற்றிக் கூறுவது) – கணவனுக்கு ஏற்ற மனைவியர்களில் மிகவும் சிறந்தவள்;அத்ரி முனிவரின் தர்மபத்னி; ப்ரம்மன், விஷ்ணு, சிவன் ஆகிய மூவருக்கும் தாய் போன்ற ஸ்தானத்தை ஒரு சூழ்நிலையில் அடைந்தவள்…..
1-8 தேவைரபிஷ்டுதா சச்வச்சாந்தி நித்யா தபஸ்விநீ
விதுஷீ ஸர்வதர்மஜ்ஞா நித்யம் பதிமநுவ்ரதா
பொருள் – தேவர்களாலும் இடைவிடாது போற்றப்படுபவள்; சமநிலையில் உள்ளதில் இருந்து நழுவாதவள்; சிறந்த தவம் உள்ளவள்; அனைத்தும் அறிந்தவள்; அனைத்து தர்மங்களும் அறிந்தவள்; எப்போதும் கணவனுக்கு உண்மையாக இருப்பவள்…..
1-9 பத்யு: ச்ருதவதீ தாஸ்தா விவிதா தர்மஸம்ஹிதா:
ப்ரணிபாத புரஸ்காரம் அனஸூயா வசோ அப்ரவீத்
பொருள் – தனது கணவனால் அனைத்து விதமான ஸம்ஹிதை மற்றும் தர்மசாஸ்திரங்களை உபதேசிக்கப் பெற்றவள். இப்படிப்பட்ட அனசூயை தனது கணவனைப் பணிந்து, அவரிடம் பின்வருமாறு கேட்டாள்.
1-10 பகவன் ஸர்வதர்மஜ்ஞ மம நாத ஜகத்பதே
த்வத்த ஏவ ச்ருதா தர்மாஸ்தே தே பஹுவிதாத்மகா:
பொருள் – அனசூயை அத்ரி முனிவரிடம்,”பகவானே! அனைத்தும் அறிந்தவரே! எனது நாதனே! இந்த உலகில் உள்ள முனிவர்களுக்கு நாயகன் போன்றவரே! உம்மிடம் இருந்து நான் பல தர்ம சாஸ்திரங்களை உபதேசமாக அறியப் பெற்றேன்”, என்று தொடங்கினாள்.
1-11 ஞானானி ச விசித்ராணி பலரூபாதிபேதத:
ஏதேப்யோ பகவத்தர்மோ விசிஷ்டோ வித்ருதோ மயா
பொருள் – இவ்விதம் உள்ள சாஸ்திரங்களின் தன்மைகள் என்ன என்பதையும் நான் அறிந்து கொண்டேன். இவை அனைத்திலும் பகவத்தர்மம் என்பது மிகவும் உயர்ந்தது என்பது எனது தாழ்வான கருத்தாகும் (பகவத் தர்மம் = பாஞ்சராத்ர ஆகமம்)
1-12 த்வயா கதயதா தாஸ்தா பகவத்தர்ம் ஸம்ஹிதா:
ஸூசிதம் தத்ர தத்ர ஏவ லக்ஷ்மீமாஹாத்ம்யம் உத்தமம்
பொருள் – தாங்கள் எப்போதெல்லாம் பகவத்தர்மம் பற்றிக் கூறுகிறீர்களோ, அப்போதெல்லாம் மஹாலக்ஷ்மியின் பெருமைகளைப் பற்றிக் கூறத் தவறுவதே இல்லை.
1-13 ரஹஸ்யத்வாதப்ருஷ்டத்வாந்ந த்வயா ப்ரகடீ க்ருதம்
ததஹம் ச்ரோதும் இச்சாமி லக்ஷ்மீ மஹாத்ம்யம் உத்தமம்
பொருள் – அந்தப் பகுதிகள் பரமரகசியமாக உள்ளதாலும், நான் அவற்றைக் குறித்து உங்களிடம் கேட்கவில்லை என்பதாலும் அந்தப் பகுதிகள் குறித்து நீங்கள் இதுவரை விளக்கியதில்லை. இப்போது எனக்கு மஹாலக்ஷ்மியின் மேன்மைகளை அறிய ஆவலாக உள்ளது.
1-14 யத் ஸ்வபாவா ஹி ஸா தேவீ யத் ஸ்வரூபா யத் உத்பவா
யத் ப்ரமாணா யத் ஆதாரா யத் உபாயாத் யத் பலா
பொருள் – அவளது ஸ்வபாவம் என்ன, அவளது ரூபம் எவ்விதம், அவளது தோற்றம் எங்கிருந்து, அவளை அறிய உதவும் ப்ரமாணம் என்ன, அவள் எதனை ஆதாரமாகக் கொண்டுள்ளாள், அவளை அடையும் உபாயம் என்ன, அவளை அறிந்ததன் மூலம் கிட்டும் பயன் என்ன?
1-15 ததஹம் ச்ரோதும் இச்சாமி த்வத்தோ ப்ரஹ்மவிதாம் வர
பவேயம் க்ருதக்ருத்யாஹம் யஸ்ய விஜ்ஞானயோகத:
பொருள் – பரப்ரஹ்மத்தை அறிந்தவரும், பல தத்துவங்கள் தெரிந்தவரும் ஆகிய உங்களிடம் இருந்து மேலே உள்ள கேள்விகளுக்கான விடைகளை அறிய ஆவலாக உள்ளேன். இப்படிப்பட்ட ஞானம் மூலமாக எனது வாழ்வின் குறிக்கோளை நான் அடைந்தவளாகிவிடுவேன்.

 உறையூர் கமலவல்லி நாச்சியார் (நன்றி – ஸ்ரீமாந் முரளி பட்டர்

No comments:

Post a Comment