telepathygiridharbaba

telepathygiridharbaba
shirdisai thunai

Wednesday 25 May 2016

பழையனூர் நீலி அம்மன். திருவாலங்காடு

ஆச்சரியம் அமானுஷ்யம் நிறைந்த பழையனூர் நீலி அம்மன் கோவில்,சிவனின் ரத்தின சபை என்று அழைக்கப்படும் திருவாலங்காடு அருகில் உள்ளது. சென்னை அருகேயுள்ள திருவள்ளூர் நகரத்தின் அருகே சிவனின் பஞ்ச சபைகளில் ஒன்றான ரத்தின சபை என்று அழைக்கப்படும் திருவாலங்காடு அருகில் அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பழையனூர். ஆச்சரியம் அமானுஷ்யம் நிறைந்த பழையனூர் நீலி அம்மன் கோவில். இங்குள்ள அம்மன் நீலி அம்மன் என அழைக்கப்படுகிறாள். மிக மிக சிறிய கோவில் தான் இது. இதன் வரலாறோ சற்று பெரியது. நல்ல தங்காள், கண்ணகி என நம் மண்ணில் வாழ்ந்த பல பெண்கள் தெய்வமாகி இருக்கிறார்கள். அவர்களுக்கு கோவிலும் உள்ளது. இதே போல் தனக்கு துரோகம் செய்து கொன்றதன் கணவனை மறுபிறவி எடுத்து பழிவாங் கியவள்தான் பழையனூர் நீலியாவாள். ஸ்தல வரலாறு : அன்றைய காஞ்சி மாநகரில் புவனபதி என்று ஒரு அந்தணர் இருந்தார். சிறிது காலம் இல்லறம் நடத்திய அவர் புனித யாத்திரை செல்லத் திட்ட மிட்டார். அதனையடுத்து காசிக்கு சென்று காசி விஸ்வநாதரை வழிபட்டு கொஞ்ச காலம் அங்கேயே தங்கியிருந்தார். அங்கிருந்த சத்தியஞானி என்பவர் புவனபதியை ஒருநாள் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தார். விருந்துக்கு போன இடத்தில் விருந்து கொடுத்தவரின் மகள் நவக்கியானியின் மனதை மயக்கி கல்யாணமும் செய்துகொண்டார். தனக்கு காஞ்சிபுரத்தில் ஒரு குடும்பம் இருப்பதைப் பற்றி மூச்சுகூட விட வில்லை. சிறிது காலம் கழித்து ஊர் ஞாபகம் வரவே காஞ்சிக்கு புறப் பட்டார் புவனபதி. நவக்கியானி நானும் வருகிறேன் என அடம்பிடிக்க வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டார் புவனபதி. போதாத குறைக்கு நவக்கியானியின் சகோதரன் சிவக்கியானியும் நானும் வருகிறேன் என கிளம்பிவிட்டான். சொந்த ஊர் நெருங்க நெருங்க புவனபதிக்கு உதறல் எடுக்க ஆரம்பித்துவிட்டது. ஒரு மாலைப் பொழுது திருவாலங்காட்டை அடைந்த அவர்கள் அங்கேயே இரவு தங்க முடிவு செய்தனர். அப்போது தான் புவனபதிக்கு ஒரு விபரீத எண்ணம் தோன்றியது. குடிப்பதற்கு தண்ணீர் கொண்டுவருமாறு கூறி மைத்துனனை அனுப்பிவிட்டு, இரண்டாவது மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டார் அடுத்து ஊரைப் பார்த்து சென்றார். தண்ணீருடன் வந்த அண்ணன், தங்கை இறந்துகிடப்பதைப் பார்த்து துடித்தான். பக்கத்தில் இருந்த புளிய மரத்தில் தூக்குப் போட்டு தானும் இறந்துவிட்டான். அவர்கள் இருவரும் நீலன், நீலி என்ற பேய்களாக அந்த ஆலங்காட்டையே சுற்றி சுற்றி வந்தனர். ஒரு பிறவி முடிந்தது. அடுத்த பிறவியில் புவனபதி வைசிய குலத்தில் தரிசனன் என்ற பெயரில் பிறந்தான். அவனது ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர்கள், இவனைப் பழிவாங்க வடக்கில் ஒரு பேய் காத்துக் கொண்டிருப்பதாக எச்சரித்தார்கள். அந்த பேயிடம் இருந்து தப்பிக்க மந்திரித்த கத்தி ஒன்றையும் கொடுத்தனர். முடிந்தவரை வடக்கு பக்கமாக போவதை தவிர்க்குமாறும் அறிவுரை கூறினர். தரிசனனுக்கு உரிய வயது வந்ததும் காஞ்சிபுரத்தில் ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. தரிசனனின் அப்பா இறப்பதற்கு முன், அவனுக்கு இருக்கும் ஆபத்தைப் பற்றி விளக்கி அந்த மந்திரக் கத்தியையும் கொடுத்துவிட்டு இறந்துவிட்டார். இப்படி இருக்க நீலனும், நீலியும் திருவாலங்காட்டில் ஒரு தம்பதிக்கு குழந்தைகளாகப் பிறந்தனர். இருவரும் பகலில் தொட்டிலில் படுத்து உறங்குவார்கள். இரவானதும் பேயாகி ஆடு, மாடுகளை கொன்று ரத்தத்தைக் குடிப்பார்கள். ஊரில் இருந்து ஆடு, மாடுகள் மர்மமான முறையில் இறப்பதைக் கண்ட ஊர்காரர்கள் ஒரு நாள் இரவு மறைந்திருந்து பார்த்தபோது நீலன், நீலியின் குட்டு வெளிப்பட்டு விட்டது. நீலன், நீலியின் குட்டு வெளிப்பட்டதும், அந்த பேய்க் குழந்தைகளை வீட்டில் வைத்துக் கொள்ள பயந்த பெற்றோர், அவற்றை தொட்டிலோடு கொண்டு போய் ஒரு வேல மரத்தில் கட்டி விட்டு வந்துவிட்டார்கள். உடனே இரு குழந்தைகளும் மீண்டும் பழைய உருக் கொண்டன. இனியும் ஒன்றாக இருந்தால் பழிவாங்க முடியாது என்று எண்ணி, பிரிந்து செல்ல முடிவெடுத்தன. நீலன் அந்த வேல மரத்திலேயே தங்கி இருக்க, நீலி திருச்செங்கோடு சென்றுவிட்டாள். ஒருநாள் பழையனூரில் உள்ள வேளாளர்கள் உழவிற்கு கலப்பை மரம் தேவைப்பட்டதால், செழிப்பான அந்த வேல மரத்தை வெட்டிக் கொண்டு போய்விட்டார்கள். இப்போது நீலனுக்கு இருந்த வீடும் போய்விட்டது. அந்த ஆத்திரத்தில் அலைந்துகொண்டிருந்த நீலன் அவ்வழியாக வந்த திருவாலங்காட்டு கோவில் குருக்களை அடித்து விட்டான் இது குறித்து குருக்கள் சிவபெருமானிடம் முறையிட, சிவபெருமான் தனது கணங்களில் ஒன்றை அனுப்பி நீலனின் கதையை முடித்துவிட்டார். இதை அறிந்ததும் அலறி அடித்து ஓடிவந்த நீலி, தனது சகோதரன் சாவிற்கு காரணமான வேளாளர்களையும் பழிதீர்ப்பேன் என சபதமேற்றாள். தக்க தருணத்திற்காக திருவாலங்காட்டிலேயே காத்திருந்தாள். இந்த சமயத்தில் தான் காஞ்சியில் இருந்த தரிசனனுக்கு திடீரென பழையனூர் சென்று வியாபாரம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. மந்திரக் கத்தி இருக்கும் தைரியத்தில், யார் தடுத்தும் கேளாமல் கிளம்பிவிட்டான். தரிசனன் திருவாலங்காட்டை அடைந்ததும் அவனை நீலி பார்த்துவிட்டது. உடனே அழகான தோற்றத்தில் மாறி வந்து தரிசனனை அழைத்தாள். ஆனால் தரிசனன் இதற்கெல்லாம் மசியவில்லை. மந்திரக் கத்தி வேறு இருந்ததால் அவனை நீலியால் நெருங்கவும் முடியவில்லை. நீலியின் எல்லா முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. உடனே நீலி பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்தாள். தரிசனனின் மனைவியைப் போல் உருமாறி, ஒரு பெரிய கள்ளிக் கட்டையை எடுத்து குழந்தையாக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு தலைவிரிகோலமாக பஞ்சாயத்தை கூட்டிவிட்டாள். தன் கணவர் தன்னை பிரிந்து செல்ல நினைக்கிறார், நீங்கள் தான் சேர்த்து வைக்க வேண்டும் என்று உருக்கமாக கண்ணீர் விட்டாள். தரிசனன் எவ்வளவு சொல்லியும் எடுபடவில்லை. என் கணவர் ரொம்ப கோபக்காரர், நான் பஞ்சாயத்தை கூட்டியதால் என்னைக் கொன்றாலும் கொன்று விடுவார். அவர் கையில் உள்ள கத்தியையும் வாங்கிக் கொள்ளுங்கள் என்றாள். தரிசனனுக்கு உதறல் எடுத்தது. சாமி இது பேய். என்னைக் கொல்ல வந்திருக்கிறது என்று வாதாடியும் எந்த பயனும் இல்லை. தரிசனரே, தைரியமாக செல்லுங்கள். ஒருவேளை உங்கள் உயிருக்கு ஆபத்து வந்தால், இங்கு பஞ்சாயத்தில் அமர்ந்திருக்கும் நாங்கள் 70 வேளாளர்களும் அப்போதே உயிரை மாய்த்துக் கொள்வோம் என்று அருகில் உள்ள சாட்சிபூதேஸ்வரர் கோவிலில் வைத்து சத்தியம் செய்துகொடுத்தனர். நீலியுடன் சென்ற தரிசனனின் கதையை நீலி முடித்துவிட்டாள். இதை அறிந்த வேளாளர்களும் சாட்சிபூதேஸவரர் ஆலயம் முன்பு தீக்குளித்து தங்கள் வாக்கை காப்பாற்றி விட்டனர். இதுதான் பழையனூர் நீலியின் கதை. இங்குள்ள சாட்சிபூதேஸ்வரர் கோவில், வேளாளர்கள் தீக்குளித்த இடம் , நீலி குழந்தையை காலால் மிதித்த இடம் எல்லாம் இன்றும் கோவில் அருகே தனியாக உள்ளது. அருகில் சாட்சி பூதேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பழங்கால சிறிய சிவாலயம். ஆங்காங்கே சிதலமடைந்திருக்கிறது. எதிரிலேயே தீக்குளிப்பு மண்டபம் இருக்கிறது. வேளாளர்கள் தீக்குளிப்பது போன்ற சிலையை செய்து வைத்திருக் கிறார்கள். மன தைரியத்துக்கும், கணவனால் கொடுமையை அனுப விக்கும் பெண்களும் பழையனூர் நீலியை வழிபட்டால் மனதைரியம் பெறலாம். கணவன் கொடுமைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. நீலி அம்மன் வழிபாடு சிறுதெய்வ வழிபாடு என்றாலும், மன உறுதியுடன் இருந்து மறு ஜென்மம் வரை போராடி தன் கணவனை கொன்று பழிதீர்த்து உக்கிர தெய்வமாக உருமாறி இருக்கிறாள். தென்மாவட்டங்களில் வழிபடும் இசக்கி அம்மனாகவும் நீலி அம்மனை ஒரு தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். பெரியபுராணத்தில் நீலி : சம்பந்தர் தன் பதிகத்தில் நீலி கதையை பதிவு செய்ததுபோல் சேக்கிழாரும் பெரியபுராணத்தில் பதிவு செய்திருக்கிறார். ‘நற்றிரம்புரி பழையனூர்ச் சிறுதொண்டர் நவைவந் துற்றபோது தம்முயிரையும் வணிகனுக் கொடுகாற் சொற்றமெய்ம் மையுந்தூக்கியச் சொல்லையே காக்கப் பெற்றமேன் மையினிகழ்ந்தது பெருந் தொண்டை நாடு’ என விவரிக்கிறார். இதேபோன்று உமாபதி சிவாச்சாரியார் என்பவர் எழுதிய சேக்கிழார் புராணத்திலும் நீலி கதை வருகிறது. நீலி கதை காலம் காலமாக திரைப் படங்களிலும் கதைகளிலும் அமானுஷ்யம் கலந்த கதையாகவே சித்தரிக் கப்பட்டுள்ளது. போலியாக கண்ணீர் வடிப்பவர்களை கிராமப்பகுதிகளில் நீலிக்கண்ணீர் வடிக்காதே என்றும் கூறுவார்கள். செல்லும் வழி : சென்னையில் சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், திருவள்ளூர், திருத்தணி செல்லும் ரயிலில் சென்றால் திருவாலங்காடு செல்லலாம் அங்குள்ள சிவன் கோவிலுக்கு சென்று விட்டு இந்த நீலி அம்மன் கோவிலுக்கு செல்லலாம். மிகவும் சிறிய அளவிலான கோவில்தான் இது..

No comments:

Post a Comment