telepathygiridharbaba

telepathygiridharbaba
shirdisai thunai
Showing posts with label பாதாம். Show all posts
Showing posts with label பாதாம். Show all posts

Saturday, 5 October 2013

பால் பானங்கள், பால் தேவையற்ற பானங்கள்..

பால் பானங்கள் சில...,

உறவினர்களோ நண்பர்களோ வீட்டுக்கு வந்தால் உடனடி உபசரிப்பு சூடான பாலில் காபி அல்லது தேநீர் மற்றும் பூஸ்ட் ஹார்லிக்ஸ் போன்ற தயாரிப்புகள். மாறுதலாக சில பானங்களைக் கொடுத்து உபசரிக்கவும், நாம் தினசரி பருகவும் சித்த மருத்துவ முறையில் சில பானங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

இஞ்சி சுவை நீர்:
தோல் நீக்கிய இஞ்சியை (ஒரு இஞ்ச்) நசுக்கி அரை டம்ளர் நீரில் காய்ச்சி வடிகட்டி, அரை டம்ளர் சூடான பாலில் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து பரிமாறவும். 
காலை காபிக்கு பதில் இதை தினசரி அருந்த, நெஞ்சு கரிப்பு, புளிஏப்பம், வாயு தொல்லை ஆகியவை நீங்கும். நல்ல பசி ஏற்படும். நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும். இஞ்சி ஒரு காய கல்ப மூலிகையாதலால் முதுமையைத் தள்ளிப் போடும். (அப்படிப் போடுங்க!)

பாதாம் சுவை நீர்:
பாதாம் பருப்பு 2, முந்திரிப் பருப்பு 4, கசகசா 1 டீஸ்பூன் இவற்றை ஊற வைத்து அரைத்து சூடான ஒரு டம்ளர் பாலில் கலந்து சிறிது சர்க்கரை சேர்த்து காலை வெறும் வயிற்றில் குடிக்க, வாய்ப் புண், வயிற்றுப் புண் குணமாகும். இதை தினமும் குழந்தைகளுக்குக் கொடுக்க புரதச் சத்து எளிதில் கிடைப்பதோடு நாள் முழுதும் உற்சாகமாகச் செயல்படத் துணைபுரிகிறது.

செம்பருத்திச் சுவைநீர்:
காம்பு நீக்கப்பட்ட ஐந்து செம்பருத்திப் பூக்களை ஒரு டம்ளர் நீர் விட்டுக் காய்ச்சி அரை டம்ளராக்கி, பால் சர்க்கரை சேர்த்துப் பருகலாம். இது இதய நோயாளிகளுக்கு ஒரு சிறந்த மருந்து. மேலும், இரத்த அழுத்த நோயாளிகள், வெள்ளை படும் பெண்களுக்கும் ஒரு சிறந்த பானம். இதை தினம் பருகிவர நல்ல பலன் கிடைக்கும்.

, சுவைநீர்:
10 தாமரை இதழ்களை ஒரு டம்ளர் நீர் விட்டு அரை டம்ளர் ஆகும் வரை கொதிக்க வைத்து, வடிகட்டி பால் சர்க்கரை சேர்த்து அருந்திவர ‘இதய கமல'மாகிய தாமரையால் இதய நோயாளிகளுக்கு நலம். தாமரைப் பூ இதழ்களை நிழலில் உலர்த்திப் பொடி செய்து கொண்டும் இவ்வாறு தயாரிக்கலாம்.

ஆவாரைப்பூ சுவைநீர்:
‘ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ' எனும் பழமொழிக்கிணங்க ஆவாரைப் பூ, இலை, பட்டை இவற்றை நிழலில் உலர்த்தி பொடி செய்து கொண்டு, இப்பொடியில் ஒரு டீஸ்பூன் எடுத்து நீரில் கொதிக்க விட்டு வடிகட்டி பால் சர்க்கரை சேர்த்து வெறும்வயிற்றில் தினசரி பருகிவர, உடல் வறட்சி, அடங்காத தாகம், மூச்சுத் திணறல் ஆகியவை நீங்கும். தோல் சம்பந்தமான நோய் உள்ளவர்களுக்கு இது மிகச் சிறந்தது. நீரிழிவு நோயாளிகள் இதை தினமும் சர்க்கரை சேர்க்காமல் குடிக்க, நீரிழிவு கட்டுப்படும். நல்ல சுறுசுறுப்பை உண்டாக்கும்.

இனி, பால் தேவையற்ற பானங்கள்...

அத்திப்பழச் சுவைநீர்:
கொத்துக்கடலை ஒரு கைப்பிடி எடுத்து இரவில் ஊறவைத்து விடவும். 4 அத்திப்பழங்களைத் துண்டாக்கி கடலையுடன் ஊறவிடவும். மறுநாள் காலை இக்கலவையை நன்கு வேக வைத்து வடிகட்டி சிறிது பால் சர்க்கரை சேர்த்து பருகி வர இரத்தம் தூய்மையடையும். உடல் திசுக்களுக்கு வளர்ச்சி அளித்து சுறுசுறுப்பை உண்டாக்கும். இரத்தப் பற்றாக்குறையுள்ளவர்கள், மாதவிடாய் கோளாறுள்ளவர்களுக்கு இதுவொரு சிறந்த பானம்.

நிலக்கடலைப்பால் சுவைநீர்:
100 கிராம் வறுக்காத நிலக்கடலையை நீரில் ஊறவைத்து வடிகட்டி,ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு ஒரு நாள் முழுதும் வைத்துவிட்டால் மறுநாள் அது முளைவிட்டிருக்கும். அத்துடன் 2 முந்திரிப்பருப்பு 4 ஏலக்காய் சிறிது குங்குமப்பூ ஆகியவற்றைப்போட்டு நன்கு அறைத்துப் பாலெடுத்து சர்க்கரை சேர்த்துப் பருகலாம். (முளைகட்டிய பயிறை தினசரி தேவையானதை எடுத்துக்கொண்டு குளிர்பதனப்பெட்டியில் பத்திரப்படுத்திக்கொள்ளலாம்.)
இது குழந்தைகளுக்கு மிகச் சிறந்த பானம். நரம்புகளுக்கு நல்ல சக்தியளிக்கிறது. முளைகட்டிச் செய்வதால் கூடுதல் சத்துகள் பெற வாய்ப்புள்ளது.

எள்ளுப் பால்:
100 கிராம் எள்ளை ஊறவைத்து முளைக்க வைத்துக் கொண்டு, சிறிது தேங்காய்த் துருவல், ஏலக்காய் கலந்து நன்கரைத்துப் பால் எடுத்துக் கொள்ளவும். சிறிது வெல்லம் அல்லது பனைவெல்லம் சேர்த்துப் பருகலாம். இது பருவமடைந்த பெண்களுக்கு சிறந்த பானம். ஒல்லியான குழந்தைகளுக்கு இதை தினமும் செய்து கொடுக்கலாம். (‘இளைத்தவனுக்கு எள்ளு' என்பதை நினைவூட்டிக் கொள்க.)

கொள்ளுப் பால்:
100 கிராம் கொள்ளை ஊற வைத்து முளைக்க வைத்து அத்துடன் சிறிது தேங்காய், ஏலக்காய் சேர்த்து நன்றாக அரைத்துப் பாலெடுத்து , சிறிது வெல்லம் அல்லது பனைவெல்லம் கலந்து பருகி வர, மழைக்காலத்தில் அடிக்கடி சளி பிடிப்பவர்கள், மூட்டு வலியுள்ளவர்கள், பக்கவாத நோயாளிகள் குணமடைவர்.
உடல் எடையைக் குறைக்க பிரயாசைப்படுபவர்கள் இதைத் தினம் பருகிவர பலன் உறுதி. (‘கொழுத்தவனுக்குக் கொள்ளு')

புதினா தேநீர்:
அடடே, வாங்க, வாங்க. இதோ கைப்பிடி புதினா இலைகளைக் கொதிக்க வைத்த நீரில் சிறிது எலுமிச்சை சாறும் சர்க்கரையும் (வெல்லம், பனைவெல்லம்) கலந்த சூடான புதினா தேநீர் குடிங்க. வயிற்றுக் கோளாறுகளுக்கு நல்லது. சூடாக பருகுவதால் எலுமிச்சை சாறு சளிபிடிக்குமென்ற பயமில்லை. வாய் துர்நாற்றம் போகும். நாள்முழுதும் புத்துணர்ச்சி. ருசியோ, தினம் தினம் பருகச் செய்யும். இரத்தம் விருத்தியாகும். 
என்னது... இன்னொரு டம்ளரா...!